உள்ளூர் செய்திகள்

ராதாபுரம் அருகே பரலோக அன்னை ஆலய தேரோட்டம்

Published On 2023-08-15 09:09 GMT   |   Update On 2023-08-15 09:09 GMT
  • தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தார்.
  • 9-ம் திருவிழா அன்று பொத்தக்காலன்விளை திருத்தல அதிபர் வெனிஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.

பணகுடி:

ராதாபுரம் அருகே உள்ள தோப்புவிளை பரலோக அன்னை ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கிறிஸ்தவ ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி மாலை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியை அர்ச்சித்து ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். திருவிழா நாட்களில் தினமும் காலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மாலையில் மறையுரை வழிபாடுகள் நடைபெற்றது.

9-ம் திருவிழா அன்று பொத்தக்காலன்விளை திருத்தல அதிபர் வெனிஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியாக இரவு 11 மணிக்கு பரலோக மாதா தேரில் ரத வீதிகளில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக உப்பு மிளகு தூவி வழிபட்டனர்.

தேரோட்டத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News