வாகைகுளத்தில் சுங்கச்சாவடியை சூறையாடிய 30 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு
- கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சேதம்.
- சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா தலைமையில் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று இரவு 10 கார்களில் ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் வந்த வாகனங்கள் தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி வந்த போது சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தததால், காரில் வந்தவர்கள் இறங்கி வந்து அங்கிருந்த பேரிகாடை தூக்கி வீசி உள்ளனர்.
மேலும் சுங்கச்சாவடியில் இருந்த கண்ணாடி மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி சூறையாடி உள்ளனர்.
மேலும்,அங்கு பணியில் இருந்த ஊழியர்களான தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த பாபு என்ற பரமசிவம் (வயது 45), நெல்லையை சேர்ந்த அண்ணாவி என்ற ஆகாஷ் (27) ஆகியோரை நாற்காலியால் தாக்கி உள்ளனர். இதில் பாபு என்ற பரமசிவத்திற்க்கு தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இயக்க தலைவர் இசக்கிராஜா உட்பட 30 பேர் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல்,கொலை முயற்சி, தீண்டாமை வன்கொடுமை மற்றும் பொது இடத்தில் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.