உள்ளூர் செய்திகள்

மாரடைப்பு ஏற்பட்டு கார் டிரைவர் சாவு

Published On 2022-08-22 07:12 GMT   |   Update On 2022-08-22 07:12 GMT
  • ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
  • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

சத்தியமங்கலம் பழைய தபால் அலுவலக தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). வாடகை கார் டிரைவர். இவருக்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மேலும் இதற்கான மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்வதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஈரோட்டுக்கு வடிவேல் வந்தார்.

அவர் ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News