மாலத்தீவு அருகே கடலில் மூழ்கி பலி- தூத்துக்குடி மீனவர் உடல் சொந்த ஊர் வந்தது
- கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி என்ற தோணி ஒன்று மாலத்தீவுக்கு சென்றது.
- அதிக காற்று வீசியதால் தோணி கவிழ்ந்து 7 பேரும் நீரில் மூழ்கினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி என்ற தோணி ஒன்று மாலத்தீவுக்கு சென்றது.
அதில் தூத்துக்குடி தருவை மைதானம் அருகே உள்ள லைன்ஸ்டவுன் 6-வது தெருவை சேர்ந்த ஸ்டான்லி சாக்ரியாஸ் (வயது 59), சகாய கிளிப்பட் ஜான் பெக்மான்ஸ், தொன்மை ஜேசு, ஆண்டன் ராஜேந்திரன், மில்டன் தாசன் பெர்ணான்டோ, ஆண்டன் வாஸ்டின் பெர்ணான்டோ, லிங்கராஜ் முனியசாமி ஆகிய 7 பேர் பயணம் செய்தனர். மாலத்தீவுக்கு அருகே சென்றபோது அதிக காற்று வீசியதால் தோணி கவிழ்ந்ததில் பயணம் செய்த 7 பேரும் நீரில் மூழ்கினர்.
இதில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி சாக்ரியாஸ் மட்டும் உயிரிழந்தார். அவரது உடலை கடலோர காவல் படையினர் மீட்டு மாலத்தீவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மீட்கப்பட்ட 6 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்தனர்.
இந்நிலையில் கடலில் மூழ்கி பலியான ஸ்டான்லி சாக்ரியாஸ் உடல் மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து வானம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இன்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.