உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் கணவனை தாக்கி கடத்தப்பட்ட இளம்பெண்ணை கோவையில் மீட்ட போலீசார்

Published On 2022-06-18 14:43 IST   |   Update On 2022-06-18 14:43:00 IST
  • தருமபுரியில் கடத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார்.
  • ஒரே நாளில் போலீசார் கோவையில் மீட்டனர்.

தருமபுரி,

தருமபுரி விசுவநாதன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலவன் மகன் சரவணகுமார் (28) .சிவில் இன்ஜினீயரான இவர் போட்டி தேர்விற்காக படித்து வந்தார். அப்போது பேஸ்புக் மூலம் கோயம்புத்தூர் கவுண்டர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகள் மிதுனா (28) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

பின்னர் காதலாக மாறியது. இந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் பழனி கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து தருமபுரி யில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டில் இருவரும் தனியாக இருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. உடனே சரவணகுமார் சென்று கதவைத் திறந்த போது திடீரென 3 பேர் வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர்.

முகத்தில் மாஸ்க் அணிந்து இருந்த அவர்கள் சரவணகுமார் வயிற்றில் எட்டி உதைத்து உள்ளனர். இதில் அவர் சுருண்டு விழுந்துள்ளார். உடனே மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து மிதுனாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தாங்கள் வந்த காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதுகுறித்து நேற்று காலை தருமபுரி காவல் நிலையத்தில் சரவணகுமார் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.வினோத் தலைமையில் இன்ஸ்பெக்டர் நவாஸ்,சிறப்பு எஸ்.ஐ.சிவபெருமாள் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி கோவை மாவட்டம் காரமடையில் மிதுனாவை மீட்டனர்.

அவர் தனது கணவரு டன் சேர்ந்து வாழ்வதாக கூறியதால் அவரை சரவண குமாரிடம் ஒப்படைத்தனர். ஒரே நாளில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை பாராட்டப்பட்டது.   

Similar News