உள்ளூர் செய்திகள்

பாலக்கோட்டில் மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் பூட்டியே கிடக்கும் மகப்பேறு- குழந்தைகள் நல மருத்துவமனை

Published On 2022-07-21 15:09 IST   |   Update On 2022-07-21 15:09:00 IST
  • மருத்துவமனை பூட்டியே கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
  • மருத்துவர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன. பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் சேர்த்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் 200- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் பிரசவிக்கின்றன. ஆனால் பாலக்கோட்டில் தனியாக மகேப்பேறு மருத்துவமனை இல்லாததால், கர்ப்பணி தாய்மார்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையை நாடி வந்தனர்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

ஆனால் மகப்பேறு மருத்துவமனைக்கு 2 ஆண்டுகளாக மருத்துவர் கள், செவிலியர்கள், ஊழியர்கள் என யாரும் நியமிக்கப் படாததால் மருத்துவமனை பூட்டியே கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது, இதனால் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஹள்ளி, பெல்ரம்பட்டி, பேளாரஹள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் நிலையில் உள்ளனர்.

எனவே தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News