உள்ளூர் செய்திகள்

ரூ.33.42 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-11-18 14:01 IST   |   Update On 2023-11-18 14:01:00 IST
  • அரியலூரில் கூட்டுறவு வாரவிழாவில் ரூ.33.42 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
  • 4482 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் சார்பில் 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் 4482 பயனாளிகளுக்கு 33.42கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.விழாவில் அமைச்சர் பேசும் போது.

மகளிர் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேலான மகளிர் மாதந்தோறும் பயன்பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தின் காரணமாக கூட்டுறவுத் துறைகளின் மத்திய வங்கிகளில் சுமார் 20,996 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அந்த வங்கி கணக்குகளின் மூலம் உரிமைத் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.இந்த செயல்பாடுகளால் மகளிர் எளிதாக மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி பெறமுடியும். பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு தொடர்ந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சருக்கு உறுதுணையாக அனைவரும் இருக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் பொது மேலாளர் திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் முத்துமாரி, மண்டல மேலாளர் டாப்செட் திருச்சி புண்ணியமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், பொதுமேலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முருகன், மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் ராஜா, துணைப் பதிவாளர் (பொ.வி.தி) அறப்பளி, வருவாய் கோட்டாட்சியர் (அரியலூர்) ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா, மற்றும் கூட்டுறவு சங்களின் பணியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News