உள்ளூர் செய்திகள்

அரியலூரில் ரூ.79 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு புதர்மண்டி கிடக்கும் சப்-கலெக்டர் பங்களா

Published On 2022-06-14 13:31 IST   |   Update On 2022-06-14 15:48:00 IST
  • அரியலூரில் ரூ.79 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சப்-கலெக்டர் பங்களா யாரும் குடியேறாததால் புதர் மண்டி கிடக்கிறது.
  • அந்த குடியிருப்பு வளாகத்தில் மது அருந்துவது உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு சமூக விரோதிகள் பயன்படுத்துகின்றனர்.

அரியலூர் :

அரியலூரில் திருச்சி சாலையில் சப்-கலெக்டருக்கான புதிய குடியிருப்பு ரூ.79.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2020 ஜூன் 1-ந்தேதி இந்த குடியிருப்பு திறக்கப்பட்டது.

ஆனால் அந்த குடியிருப்பில் இதுவரை சப்-கலெக்டரோ அல்லது கோட்டாட்சியரோ குடியேறவில்லை. இதனால் அந்த கட்டிடத்தை சுற்றி சீமைக்கருவேல முட்செடிகள் ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.

அத்துடன் கட்டிடமும் பாழடைந்து வருகிறது. எனவே மக்களின் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலரும், மாவட் விவசாயிகள் சங்க தலைவருமான செங்கமுத்து கூறுகையில், இந்த குடியிருப்பு கட்டிடம் கட்டி திறக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது வேதனை அளிக்கிறது.

இதனால் மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் பாழடைந்து வருகிறது. அந்த குடியிருப்பு வளாகத்தில் மது அருந்துவது உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு சமூக விரோதிகள் பயன்படுத்துகின்றனர்.

எனவே சப்-கலெக்டருக்கான அந்த குடியிருப்புக் கட்டிடத்தை சுற்றி வளர்ந்துள்ள சீமைக்கருவேல முட்செடிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்தி கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News