உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் சாவு

Published On 2022-06-09 15:03 IST   |   Update On 2022-06-09 15:03:00 IST
  • ஜல்லிக்கட்டில் மாடு முட்டி சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தார்.
  • சீறிப்பாய்ந்து வந்த காளை எதிர்பாராதவிதமாக இளவரசனை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த இளவரசனுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டை அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளை அதன் உரிமையாளர்கள் சேகரிக்கும் இடத்திற்கு அருகே பார்வையாளராக குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன்(35) பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளை எதிர்பாராதவிதமாக இளவரசனை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த இளவரசனுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இளவரசன் உயிரிழந்தார். இதுகுறித்து இளவரசனின் மனைவி முத்துலட்சுமி வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News