உள்ளூர் செய்திகள்

வாகன உரிமையாளருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.30 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு

Published On 2022-12-30 09:06 GMT   |   Update On 2022-12-30 09:06 GMT
  • வாகன உரிமையாளருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.30 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
  • ஒரு வாரம் தனது வாகனத்தை தேடியும் கிடைக்காததால், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

அரியலூர்:

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் வசித்து வருபவர் சம்பத் மகன் முருகன் (வயது42). கடந்த 2014 ஆம் ஆண்டு வாங்கிய புதிய காருக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. 15,860 செலுத்தி காப்பீடு செய்திருந்தார்.இந்நிலையில், கடந்த 2015 ஜூன் முதல் வாரத்தில் வீட்டின் முன்பாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போய்விட்டது. ஒரு வாரம் தனது வாகனத்தை தேடியும் கிடைக்காததால், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து தமது காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் அளித்துள்ளார் முருகன். ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க 8 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனம் புகார் தாரருக்கு இழப்பீட்டு தொகையை தர மறுத்துவிட்டது.இதையடுத்து முருகன், தமக்கு காப்பீட்டுத் தொகை ரூ.3.20 லட்சமும், அந்நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் கேட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது. இதனை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், வாகனம் காணாமல் போன பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்ய ஏற்பட்ட கால தாமதத்தை காரணம் காட்டி காப்பீட்டுத் தொகையை மறுக்க முடியாது. எனவே புகார்தாரர் தமது வாகனத்தை ரூ.4 லட்சத்துக்கு காப்பீடு செய்து 11 மாதங்கள் நிறைவடைந்து விட்டதால் சட்டப்படியான பிடித்தங்களாக 20 சதவீத தொகையை கழித்துக் கொண்டு ரூ 3.20 லட்சத்தை வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் புகார்தாரருக்கு வழங்க வேண்டும். மேலும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தை புகார்தாரருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்ட எட்டு வாரங்களுக்குள் வாகனத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என்ற சான்றிதழை அரும்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் பெற்று காப்பீட்டு நிறுவனத்திடம் புகார்தாரர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags:    

Similar News