பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற தூய்மை பணியாளருக்கு பாராட்டு விழா
- கடந்த 1989 -ம் ஆண்டில் பணியில் சேர்ந்த இவர் 33 ஆண்டுகள் பணியாற்றினார்.
- அவரது வீடு வரை பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடன் நடன மாடி ஊர்வலமாக அழைத்து பட்டு கவுரவிக்கப்பட்டார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னா கரம் பேரூராட்சி யில் தூய்மை பணியாளராக பணியாற்றியவர் ராணி (வயது 60). நேற்று முன்தினம் ஜூன் 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். கடந்த 1989-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த இவர் 33 ஆண்டுகள் பணியாற்றினார்.
இவர் பணி ஓய்வு பெற்றதை அடுத்து பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா தலைமையில் தூய்மை பணியாளர் ராணிக்கு மாலை அணிவிக்கப்பட்டு பேரூராட்சி அலுவலகம் முதல் வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி, பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவழியாக அவரது வீடு வரை பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்களுடன் நடனமாடி ஊர்வலமாக அழைத்து பட்டு கவுரவிக்கப்பட்டார்.
இதில் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தள்ளுவண்டி தூய்மை பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர் ராணிக்கு பணி ஓய்வு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதில் பேரூராட்சி தலைவர் வீரமணி, துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கீதா, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நினைவு பரிசுகள் வழங்கி அவரது பணியை பாராட்டி பேசினர்.