உள்ளூர் செய்திகள்

உவரி தூண்டில் வளைவில் தரை தட்டிய விசைப்படகு மற்றொரு படகு மூலம் மீட்க முயற்சி

Published On 2023-10-09 10:51 GMT   |   Update On 2023-10-09 10:51 GMT
  • கப்பலில் கடந்த 1-ந்தேதி சார்லஸ் மற்றும் 6 மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
  • எதிர்பாராதவிதமாக அலை சீற்றத்தின் காரணமாக அந்த படகு அங்கிருந்த பாறை இடுக்கில் சிக்கி தரை தட்டியது.

திசையன்விளை:

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் பாஸ்கர் சார்லஸ். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு சொந்தமாக இழுவை வலை விசைப்படகு உள்ளது. சுமார் ரூ.25 லட்சம் மதிப்பு கொண்ட இந்த நவீன வகை இழுவை படகானது கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் விரித்திருக்கும் வலைகளை சேதப்படுத்தாமல் கடந்து செல்லும் திறனுடையது. இந்த கப்பலில் கடந்த 1-ந்தேதி சார்லஸ் மற்றும் 6 மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை நெல்லை மாவட்டம் உவரி அருகே கடலில் மீன்பிடித்துவிட்டு அவர்கள் மீண்டும் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது உவரி தூண்டில் வளைவு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அலை சீற்றத்தின் காரணமாக அந்த படகு அங்கிருந்த பாறை இடுக்கில் சிக்கி தரை தட்டியது. இதனால் மேற்கொ ண்டு அந்த படகு நகர முடியாமல் போய்விட்டது.

இதனால் படகின் டிரைவர் பிச்சையா என்பவர் தூத்துக்குடியில் உள்ள சக மீனவர்களுக்கு வாக்கி-டாக்கியில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் தருவை குளத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரது விசைப்படகின் டிரைவர் சேசு தனது விசைப்படகில் சம்பவ இடத்திற்கு 6 மீனவர்களுடன் விரைந்துள்ளார். அவர்கள் இன்று காலை அங்கு சென்றனர்.

பாறை இடுக்கில் சிக்கிய படகில் இருந்த வலை உள்ளிட்ட பொருட்களை மற்றொரு இழுவை படகுக்கு மாற்றிவிட்டு சிக்கிய படகை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உவரி கடலோர காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். ஆனாலும் தூண்டில் வளைவிற்குள் தரைதட்டி நிற்கும் படகை மீட்க முடியவில்லை. கடலில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் இன்று இரவுக்குள் படகை மீட்டுவிடலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News