உள்ளூர் செய்திகள்

கடலூர் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீ வைத்து எரிக்க முயற்சி குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து விசாரணை

Published On 2022-08-29 14:33 IST   |   Update On 2022-08-29 14:33:00 IST
  • சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.
  • 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக மத்திய சிறைச்சாலை தீவிர சோதனையில் செல்போன், சார்ஜர் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்தார். மேலும் கைதிகளை கடும் எச்சரிக்கை செய்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை மணிகண்டன் வீட்டில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறைத்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், டெல்டா பிரிவு உள்ளிட்ட 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் யாரேனும் கூலிப்படை ஏவி இந்த சம்பவத்தில் ஈடுபட வைத்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் கூலிப்படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து விசாரணை செய்ய விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News