உள்ளூர் செய்திகள்

செவ்வந்தி பூக்களை பறிக்கும் தொழிலாளர்கள்.

நத்தம் பகுதியில் செவ்வந்தி பூக்கள் விலை சரிவு - விவசாயிகள் கவலை

Published On 2023-11-17 08:09 GMT   |   Update On 2023-11-17 08:09 GMT
  • நத்தம் சுற்று வட்டார பகுதியில் செவ்வந்தி பூக்கள் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.
  • பூக்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலையில் சாகுபடியும் பாதிக்கப்பட்டு ள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான, மணக்காட்டூர்,கே.புதூர், சிறுகுடி, பிள்ளையார்நத்தம், வத்திபட்டி,காசம்பட்டி, செந்துறை உள்ளிட்ட கிராமங்களில் செவ்வந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படு கிறது.

தற்போது இப்பகுதியில் அதிக அளவு செவ்வந்தி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.செவ்வந்திப் பூக்களைப் பொருத்தவரை ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். 3 மாதங்கள் வரை பூக்கள் வரத்து இருக்கும். நத்தம் சுற்று வட்டார பகுதியில் பூக்கள் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.இந்த பூக்கள் மதுரை,திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக முகூர்த்த தினங்கள், திருவிழா காரணமாக விலை ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.ஐப்பசி மாதம் முகூர்த்த தினங்கள்,திருவிழாக்கள் குறைவாக இருப்பதால் பூக்கள் விலை கடுமையாக சரிந்து ரூ.30 முதல் ரூ.50 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழையால் பூக்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.மிகவும் எதிர்பார்த்த பூக்களுக்கு விலை கிடைக்காத நிலையில் சாகுபடியும் பாதிக்கப்பட்டு ள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் விலை உயரும் என்ற நம்பிக்கை தொடர்ந்து பூக்களை பறிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News