தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொலை
- நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே தலையில் கல்ைல போட்டு தொழிலாளி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்காய் தோப்பு, மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அல்லாஹ் பாகீஷ் (35), கூலித்தொழிலாளி. இவர் மாங்காய் தோப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதில் ஒருவர், அருகில் இருந்த கல்லை தூக்கி அல்லாஹ் பாகீஷ் மீது போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.