கள்ளக்குறிச்சியில் அதிரடி: கெட்டுப்போன 110 கிலோ மீன்கள் பறிமுதல்
- கள்ளக்குறிச்சியில் கெட்டுப்போன 110 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தியதாக கடை உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், விழுப்புரம் மீன்வள மேற்பா ர்வையாளர் சுதாகர் ஆகியோர் அப்பகுதியில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன நிலையில் இருந்த சுமார் 110 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தியதாக கடை உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும், இவ்வாறு கெட்டுப்போன மீன்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரை எச்சரித்தனர். கள்ளக்குறிச்சி மீன் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.