உள்ளூர் செய்திகள்

வேதிப்பொருட்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை: கலெக்டர் தகவல்

Published On 2023-05-12 06:40 GMT   |   Update On 2023-05-12 06:40 GMT
  • கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அதனை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி, வயிற்றுபோக்கு, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதுடன் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் இருக்கிறது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன் உடனடி அபாரதம் விதிக்கப்படும். மேற்குறிப்பிட்ட குற்றத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யவும். 3 மாத காலம் வரை கடையை சீல் வைத்து வர்த்தகத்தை நிறுத்திவைக்கப்படும்.

நுகர்வோருக்கு வழங்கப்படும் பழங்கள் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் தெரிவிக்கலாம் எனவும், புகார்தாரரின் விவரங்கள் மற்றும் ரகசியம் பாதுகாக்கப்படுவதுடன் புகார் அளித்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்யப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு பேசினார். 

Tags:    

Similar News