மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையில் ஆதாரை இணைக்க வேண்டும்- கலெக்டர் தகவல்
- உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியம்.
- மாற்றுத்திறனாளிகள் எழுத்து பூர்வமாக நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியமாகும்.
ஆண்டிற்கு ஒரு முறை வழங்க வேண்டிய மாற்றுத்திறனாளி உயிருடன் உள்ளார் என்று சம்மந்தப்பட்ட கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 6ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 30.12.2022-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க உதவித் தொகையினை தொடர்ந்து பெற்றிடவும் ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் எழுத்துபூர்வமாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும்.
மாத உதவித்தொகை பெறுபவர்கள் மட்டுமன்றி அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி தங்களது அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.