ஒரே நேரத்தில் 1038 கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி
- தனி நபர்களும் 50 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
- ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக 1,038 பேர் பங்கேற்று நடனமாடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா நேற்று தொடங்கியது.
இதில் நேற்று மாலையில் ஒரே நேரத்தில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக கோவில் வளாகத்தில் மகா நந்திகேசுவரர் மண்டபத்தைச் சுற்றியுள்ள மேடையில் திறந்தவெளி அரங்கு அமைக்கப்பட்டது. இதில், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 குழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
தவிர, தனி நபர்களும் 50 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
சிறுமிகள் முதல் பெரியவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு கலைஞருக்கும் அடையாள எண் வழங்கப்பட்டது.
இதன்படி வரிசையாக நிறுத்தப்பட்டு, நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தவிர, பாட்டு, மிருதங்கம், தவில், வீணை உள்பட சுமார் 50 இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு இசைத்தனர்.
சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 3 பாடல்கள் பாடப்பட்டன.
இந்நிகழ்ச்சியைக் காண ஆயிர த்துக்கும் அதிகமானோர் திரண்டு ரசித்தனர்.
இதேபோல, இக்கோயிலில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆயிரமாவது ஆண்டு விழாவில் ஆயிரம் பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இரண்டாவது முறையாக 1,038 பேர் பங்கேற்று நடனமாடியது குறிப்பிடத்தக்கது.