மாடுகளை திருடி ஆந்திராவில் விற்பனை செய்த கும்பல்
- மாடுகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்
- மாட்டு சந்தையில் சிக்கிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி குடியாத்தம் பணமடங்கியில் உள்ளிட்ட ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மாடுகள் திருடு போய் வருகிறது.
இது குறித்து அந்தந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நள்ளிரவு நேரங்களில் லோடு ஆட்டோவுடன் சுற்றி திரியும் கும்பல் கிராமப்புற பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்டி வைக்கப்படும் மாடுகளை அவிழ்த்து சென்று ஆந்திர மாநில சந்தேகங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பனமடங்கி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகள் ஆந்திர மாநிலம் பலமநேரில் நடைபெற்ற மாட்டு சந்தையில் மாடு வாங்க சென்றனர்.
அப்போது பனமடங்கியில் திருடு போன மாடுகள் அங்கு விற்பனைக்கு நிறுத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விவசாயிகள் பனமடங்கி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பலமனேர் மாட்டுச்சந்தைக்கு சென்றனர்.
அங்கு மாடுகளை விற்பனைக்கு வைத்திருந்த கும்பல் மாடுகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஒரு வாலிபர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். திருடு போன 4 மாடுகளில் 3 மாடுகளை போலீசார் மீட்டனர். மாட்டு சந்தையில் சிக்கிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் மாடு திருடும் கும்பல் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.