உள்ளூர் செய்திகள்

ராமாபுரத்தில் வங்கியில் கடன் பெற்று தருவதாக காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த போலி டி.எஸ்.பி. கைது

Published On 2023-04-29 10:16 GMT   |   Update On 2023-04-29 10:16 GMT
  • வங்கியில் கடன் பெற்று தருகிறேன் தொழிலை விரிவு படுத்துங்கள் என்று விஜயகுமாரிடம் அவர் ஆசை வார்த்தை கூறினார்.
  • விஜயகுமார் கடன் வாங்கி தருமாறு கேட்டு பாலாஜியிடம் பல்வேறு தவணைகளில் ரூ 10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

போரூர்:

சென்னை ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42) பெயிண்டிங் காண்டிராக்டர்.

இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு கே.கே நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாலாஜி (வயது60) என்பவர் அறிமுகமானார்.

அப்போது "வங்கி உயர் அதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. வங்கியில் கடன் பெற்று தருகிறேன் தொழிலை விரிவு படுத்துங்கள்" என்று விஜயகுமாரிடம் அவர் ஆசை வார்த்தை கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய விஜயகுமார் கடன் வாங்கி தருமாறு கேட்டு பாலாஜியிடம் பல்வேறு தவணைகளில் ரூ 10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட பாலாஜி இதுவரை விஜயகுமாருக்கு கடன் ஏதும் பெற்று தரவில்லை. மாறாக வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் பாலாஜி தான் "பொருளாதார குற்ற தடுப்பு பிரிவில் டி.எஸ்.பி" என்றும் கூறி மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் பண மோசடியில் ஈடுபட்ட பாலாஜி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன், ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது பாலாஜி டி.எஸ்.பி என போலி அடையாள அட்டையை காட்டி விஜயகுமாரை மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News