உள்ளூர் செய்திகள்

சின்னசேலத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2023-07-25 07:51 GMT   |   Update On 2023-07-25 07:51 GMT
  • தினேஷ் வேலை தேடி கோயம்புத்தூருக்கு சென்றார்.
  • உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மகாசக்தி நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, தினேஷ் வேலை தேடி கோயம்புத்தூருக்கு சென்றார். இதனால் பிரியா மற்றும் அவரது குழந்தைகள், பக்கத்து தெருவில் வசிக்கும் தாயார் வீட்டிற்கு இரவில் தூங்கச் சென்று விடுவார்கள். காலையில் எழுந்து வீட்டிற்கு வந்து விடுவார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பிரியா தனது தாயார் வீட்டுக்கு தூங்கச் சென்றார். இன்று காலை வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 5 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக சின்னசேலம் போலீசாருக்கு தனது பெற்றோர் உதவியுடன் பிரியா தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News