உள்ளூர் செய்திகள்

போதை வாலிபர்கள் அட்டகாசம்- போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிக்க முயன்ற 3 பேர் கைது

Published On 2022-11-14 11:01 IST   |   Update On 2022-11-14 11:01:00 IST
  • போதை வாலிபர்கள் சிலர் அவ்வழியே வந்த வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.
  • போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பழனி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம்புதூரைச் சேர்ந்தவர் பாலா. இவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவி கல்பனாவுடன் ஒரு காரில் பழனியில் ஒரு விசேஷத்துக்கு வந்தார்.

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு காரில் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டுக் கொண்டு இருந்தார். அப்போது காமராஜ் நகர் பகுதியில் போதை வாலிபர்கள் சிலர் அவ்வழியே வந்த வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் கத்தியை காட்டியும் மிரட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய போலீஸ்காரர் பாலா அவர்களை எச்சரித்தார். அப்போதும் அந்த வாலிபர்கள் கேட்காமல் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர்.

இதனால் காருக்குள் இருந்து கல்பனா தேவி இறங்கி சத்தம் போட்டார். ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்தனர்.

இதில் சங்கிலி அறுந்து விழுந்தது. இதனையடுத்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் கல்பனா தேவி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்டு நகை பறிக்க முயன்ற காமராஜ் நகரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 20), கார்த்தி (22), சாலமன் ராஜா (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பழனி புறநகர் பகுதியில் குடிபோதையில் இரவு நேரங்களில் வாலிபர்கள் ரகளையில் ஈடுபடுவதும், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News