உள்ளூர் செய்திகள்

டவுன் கல்லணை பள்ளியில் உள்ள தேர்வு எழுதும் வகுப்பறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த காட்சி.

73 மையங்களில் 21 ஆயிரத்து 754 பேர் எழுதுகின்றனர்: நெல்லையில் தயார் நிலையில் பிளஸ்-2 தேர்வு மையங்கள்

Published On 2023-03-12 09:24 GMT   |   Update On 2023-03-12 09:24 GMT
  • 10 ஆயிரத்து 315 மாணவர்கள் மற்றும் 11ஆயிரத்து 439 மாணவிகள் ஆகியோர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
  • போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் ஒப்படைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

21,754 பேர் தேர்வு எழுதுகிறார்கள்

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 21 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் 10 ஆயிரத்து 315 மாணவர்கள் மற்றும் 11ஆயிரத்து 439 மாணவிகள் ஆகியோர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர சிறைக் கைதிகள், தனித்தேர்வுகளுக்காக 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

தேர்வையொட்டி மாவட்டத்தில் 5 பள்ளிகளில் வைக்கப்பட்டு உள்ள வினாத்தாள் கட்டுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

நாளை காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தூய்மை பணிகள்

நாளை தேர்வு தொடங்குவதையொட்டி மாநகர பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு அறைகளில் பதிவு எண்கள் ஒட்டும் பணி முடிவடைந்து விட்டது.

இன்று பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தும்படி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

அதன் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் டவுன் மண்டலத்துக்குட்பட்ட தேர்வு மையங்களில் தூய்மை பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு உள்ள வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

Tags:    

Similar News