உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ராஜபாளையத்தில் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள முத்துராமலிங்கதேவர் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 -வது பிறந்த நாளையொட்டி ராஜபாளையம் தொகுதியில் உள்ள 300 மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.எல்.ஏ.வின் 8,9,10-வது மாத ஊதியத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் தலா ரூ. 1000- ஐ நிதி உதவியாக தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இந்த நிகழ்வில் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் ஓயாமல் உழைத்து கொண்டிருந்தவர் கருணாநிதி தான். அவர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் வளர்ச்சி க்காகவும், உறுதியான நடவடிக்கை எடுத்து அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகைபுரிந்தபோது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க வேண்டும், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக வழங்கவேண்டும்.
பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகராக அலுவல் மொழியாகவும் உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் அறிவிக்க வேண்டும், நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும், மத்திய அரசின் நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என முக்கிய 5 கோரிக்கைகளை வைத்தார். இதை உலகமே வியந்து பாராட்டுகிறது.
ராஜபாளையம் தொகுதியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி வரும் மாதம் முழுவதும் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இனிவரும் சட்ட மன்ற உறுப்பினர் ஊதியத்தில் இருந்து தொகுதியில் உயர்கல்வி பயில இருக்கும் ஏழை, எளிய மாணவ-மாணவியர்களில் அந்த பகுதியிலுள்ள கிளைச்செயலாளர், வார்டு செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்களின் பரிந்துரையின்படி 25 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களின் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள இருக்கிறேன் என்றார்.
விழாவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், ஷியாம்ராஜா, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.