உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடி அருகே கொடை விழாவில் சாமியாடி சென்றவர் கிணற்றில் விழுந்து பலி

Published On 2022-05-28 09:36 GMT   |   Update On 2022-05-28 09:37 GMT
தூத்துக்குடி அருகே கோவில் கொடையில் சாமியாடியவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் சாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எல்லை நாயக்கன் பட்டியை சேர்ந்த முருகன் யோகீஸ்வரர் (65) என்பவர் சாமி ஆடி சென்றுள்ளார். 2 மணி நேரமாக வேட்டைக்கு சென்ற சாமி திரும்பி வராததால் பக்தர்கள், பொதுமக்கள் அவரை தேடி சென்றனர்.

அப்போது தெய்வச்செயல்புரம் ஊருக்கு கிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாழடைந்த மொட்டை கிணற்றில் சாமியாடி சென்ற முருகன் யோகீஸ்வரர் தவறி விழுந்து கிடந்ததை கண்டனர். 

உடைந்த பாட்டில்கள் சேரும் சகதியுமாக இருந்த அந்தக் கிணற்றில் சாமியாடி முருகன் யோகீஸ்வரர் விழுந்துகிடந்ததால் அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் உடனடியாக உள்ளே இறங்கி அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

 அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News