உள்ளூர் செய்திகள்
நகை வாங்குவது போல் நடித்து தங்க செயின் திருட்டு
தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை பெண்கள் திருடி சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர்.அவர்கள் நகை வாங்குவது போல் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தனர்.
செயின் வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் தங்க செயினை திருடி பேக்கில் வைத்து கொண்டு அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த கவரிங் செயினை டேபிளில் வைத்து விட்டு அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர்.
இதையடுத்து ஊழியர் அவர்களை கூப்பிட்டு பார்த்தும் பயன் இல்லை. அதற்குள் அந்த பெண்கள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் செயினை பரிசோதித்தபோது அது கவரிங் என்றும், ஏமாற்றி விட்டு தங்க நகையை பெண்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து கடை உரிமையாளர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுமையாக மூடி இருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் பதிவாகவில்லை. இருந்தா லும் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் யார்? இதற்கு முன்னர் வேறு ஏதாவது கடையில் திருட்டு செயலில் ஈடுபட்டிருந்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.