உள்ளூர் செய்திகள்
கைது

ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க. கவுன்சிலரை கொல்ல முயற்சி- 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-05-27 10:04 GMT   |   Update On 2022-05-27 10:04 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க. கவுன்சிலரை கொல்ல முயன்றது தொடர்பாக புரட்சிபாரதம் கட்சி நிர்வாகி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபத்திரன். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். கடந்த மாதம் மர்மநபர்கள் சிலர் வீராவை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் கவுன்சிலர் வீராவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி விசாரணையை துவங்கினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் வீரா மீது முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் கட்சி பட்டு பகுதியை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த மிதுன்சக்ரவர்த்தி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீராவை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. போலீசார் இந்த வழக்கில் மிதுன் சக்கரவர்த்தி உள்பட 8 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிதுன் சக்கரவர்த்தி (வயது 29) மற்றும் வெங்காடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 23),

வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 29) ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சுதாகர் பரிந்துரை செய்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆரத்தி மூவரையும் ஜாமினில் வராத படி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
Tags:    

Similar News