காட்பாடி அருகே பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை
வேலூர்:
பெங்களூரை சேர்ந்த ஜெய்சங்கர் நாயுடு மகன் தருண் குமார் (வயது 20) காட்பாடி அடுத்த சின்னலத்தேரியில் உள்ள அவரது தாய் மாமா ரமேஷ் (வயது 45 ) என்பவர் வீட்டில் தங்கி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் ரமேஷின் மகள் வேறு யாருடனோ போனில் பேசுவதாக தருண்குமார் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தருண்குமாரை தாக்கினார். இதுபற்றி அவர் பெங்களூரில் உள்ள அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
நேற்று இரவு தருண்குமாரின் தாயார் கிரிஜா லத்தேரிக்கு வந்தார். அப்போது மகனை தாக்கியது குறித்து அவரது அண்ணன் ரமேஷிடம் தட்டிக் கேட்டார்.
இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து தருண்குமாரை தென்னைமட்டையால் தாக்கினர்.
படுகாயமடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தருண் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லத்தேரிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.