உள்ளூர் செய்திகள்
மாணவர்கள் மரக்கன்று நட கலெக்டர் அறிவுறுத்தல்
மாணவர்கள் மரக்கன்று நட தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வீட்டுக்கொரு விருட்சம் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தினை உலக புவி தினத்தன்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.
இத்திட்டத்திற்கு கவின்மிகு தஞ்சை இயக்கம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்வடிவம் கொடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 5000 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனில் தமிழகத்தில் முதல்முறையாக திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இசை வனம் உருவாக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும்.
இதன் தொடர்ச்சியாக அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் “புஷ்பவனம்” எனும் பெயரில் 500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.
மேலும் அக்கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கியா மூலிகைத் தோட்டத்தினையும் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர், இக்கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவ -மாணவியரும் அவர்களது வீடுகளில் ஒரு மரத்தினை வளர்த்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.