உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்கள் அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.

கொடைக்கானல் கோடை விழா- மலர் கண்காட்சி நாளை தொடக்கம்

Published On 2022-05-23 10:05 GMT   |   Update On 2022-05-23 10:05 GMT
கோடை விழா மலர் கண்காட்சி நாளை தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் வேளாண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

வருடம் முழுவதும் இதமான சீதோசனம் நிலவி வந்தாலும் கோடை சீசன் மற்றும் ஆப் சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் நாளை (24-ந்தேதி) கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி கோடை விழா நடைபெறுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

அதிக அளவு சுற்றுலா வாகனங்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் பேரிகார்டு வைத்து கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

மோயர்பாய்ண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

நாளை கோடை விழா மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் வேளாண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பிரையண்ட் பூங்காவில் டைனோசர் உருவம், திருவள்ளுவர் சிலை மற்றும் அறிவியல் படைப்புகள் மலர்களால் உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை காலை 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் விழா தொடங்க உள்ளது. விழாவை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, மதிவேந்தன், வேலுச்சாமி எம்.பி., செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாளை தொடங்கும் கோடை விழா 10 நாட்கள் ஜூன் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 6 நாட்கள் தோட்டகலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாவும் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News