உள்ளூர் செய்திகள்
வாணரப்பேட்டையில் ஏலச்சீட்டு தகராறில் எலக்ட்ரீசியனை தாக்கிய தந்தை-மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவா தோப்பு முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது36). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மனைவி சுரேகாவிடம் ஏல சீட்டு கட்டி வந்தார்.
ஏலசீட்டு முடிந்த நிலையில் பணம்-கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக செந்திலுக்கும் சுரேகாவுக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் செந்தில் அப்பகுதியில் உள்ள ஒர்க்ஷாப்பில் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேகாவின் மகன் கார்த்திக் தகாத வார்த்தைகளால் செந்திலை திட்டினார். இதனை செந்தில் தட்டிக்கேட்ட போது இங்கேயே இரு இதோ வருகிறேன் என்று கூறி விட்டு சிறிது நேரத்தில் கார்த்திக் தனது தந்தை ஜெயக்குமார், தனது சகோதரர் தினேஷ்குமார் ஆகியோருடன் அங்கு வந்தார்.
பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து செந்திலை சரமாரியாக தாக்கினர். வலி தாங்காமல் செந்தில் அலறவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தர். உடனே இதனை பார்த்ததும் ஜெயக்குமார் மற்றும் அவரது மகன்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த செந்தில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பிப்டிக் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக நெல்லித்தோப்பு அண்ணாநகர் 4-வது குறுக்கு தெருவில் செல்வகணபதி என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். வாரம் முழுவதும் விடுமுறை இல்லாமல் கட்டிட வேலை செய்து வந்த பாஸ்கரனை மாலை 6 மணிக்கு பிறகும் கட்டிட வேலை செய்யுமாறு செல்வகணபதி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் பாஸ்கரன் வேலை செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வகணபதி கட்டிட மேஸ்திரி கோவிந்தனை அழைத்து பாஸ்கரனை அடித்து விரட்டுமாறு கூறினார். மேலும் செல்வகணபதியும் கோவிந்தனும் சேர்ந்து பாஸ்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஸ்கரன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.