உள்ளூர் செய்திகள்
மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு
சிவகங்கையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது கண்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி கருப்பையா என்பவர் மனுக்களை மாலையாக அணி்ந்து வந்தார்.
அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஏற்கனவே 100 முறை மனு அளித்தேன்.
அந்த மனுக்கள் மீது இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் அதே கோரிக்கை குறித்து 101-வது மனுவாக அளிக்கவந்துள்ளேன் என்றார்.
கருப்பையா நூதன முறையில் இதுவரை தான் அளித்த மனுக்களின் நகல்களை லேமினேசன் செய்து கழுத்தில் மாலையாக அணிந்தும், கையில் மனுக்களையும் கொண்டுவந்து மீண்டும் ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தார். இது விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.