உள்ளூர் செய்திகள்
கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
கோவில் திருவிழாவுக்கு செல்ல மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டையில் கோவில் திருவிழாவுக்கு செல்ல மனைவி பணம் டுக்க மறுத்ததால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை லாஸ்பேட்டையை அடுத்த பெத்து செட்டிப்பேட்டை குளக்கரை வீதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 32). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கோபால கிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மது குடித்துவிட்டால் கோபால கிருஷ்ணன் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று கோபால கிருஷ்ணன் மதுகுடித்து விட்டு தனது சொந்த ஊரான சிறுவாலையில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு செல்ல திவ்யாவிடம் பணம் கேட்டார்.
ஆனால் திவ்யா பணம் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கோபால கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். திவ்யா வீட்டின் வெளியே மகனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது கோபால கிருஷ்ணன் வீட்டில் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு சேலையால் தூக்கில் தொங்கினார். வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த திவ்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கோபால கிருஷ்ணன் தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்த திவ்யா உடனே தூக்கில் இருந்து கணவரை மீட்டு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால கிருஷ்ணன் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.