உள்ளூர் செய்திகள்
கத்தி குத்து

அண்ணனுக்கு மது வாங்கி கொடுத்ததை கண்டித்த தம்பியை கொலை செய்ய முயற்சி- 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2022-05-21 05:24 GMT   |   Update On 2022-05-21 05:24 GMT
தேவக்கோட்டையில் இன்று காலை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன்கள் விக்னேஷ், பாலாஜி (வயது 35). இருவரும் கட்டிட தொழிலாளிகள்.

கடந்த சில மாதங்களாக விக்னேஷ் வீட்டில் சம்பளத்தை சரியாகக் கொடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்.

விக்னேஷ்சுடன் வேலை பார்க்கும் அவரது நண்பர்கள் ஜீவா நகரைச் சேர்ந்த டேவிட் என்ற பிரம்மன் (32), அழகப்பன் (36) ஆகியோர் சம்பளத்தை கொடுக்காமல் அதற்கு பதிலாக மது வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் பாலாஜிக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் அண்ணனின் நண்பர்களை கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்றிரவும் பாலாஜி மற்றும் டேவிட், அழகப்பன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இன்று காலை பாலாஜி கட்டிட வேலைக்கு செல்வதற்காக வழக்கம்போல் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே சக தொழிலாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த டேவிட், அழகப்பன் ஆகியோர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த டேவிட், அழகப்பன் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாஜியை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பாலாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டேவிட் அழகப்பன் ஆகியோரை தேடி வருகிறார்.

தேவகோட்டையில் இன்று காலை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News