உள்ளூர் செய்திகள்
பறவைகளை கையில் எடுத்து மகிழ்ந்த கவர்னர் தமிழிசை

வனத்துறை அலுவலகத்தில் ஆய்வு: பாம்பு-பறவைகளை கையில் எடுத்து மகிழ்ந்த கவர்னர் தமிழிசை

Published On 2022-05-21 03:54 GMT   |   Update On 2022-05-21 05:51 GMT
தாவரவியல் பூங்காவில் இயக்கப்படும் சிறுவர் ரெயிலை பார்வையிட்ட புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், குழந்தைகளுடன் ரெயிலில் சென்று குதூகலமாக பேசினார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தாவரவியல் பூங்காவுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தாவரவியல் பூங்காவில் இயக்கப்படும் சிறுவர் ரெயிலை பார்வையிட்டார். அப்போது குழந்தைகளுடன் ரெயிலில் சென்று குதூகலமாக பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, புதுவை திரைப்படத்துறையின் மனதுக்கு நெருக்கமான இடமாக உள்ளது. இங்கு விரைவில் திரைப்பட நகரம் உருவாக்கப்படும்.

புதுவை சீதோஷ்ண நிலைக்கு பிப்ரவரி மாதம் மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என கூறி உள்ளனர். கொரோனா தொற்றால் மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது.

இந்த ஆண்டு நிச்சயமாக மலர் கண்காட்சி நடைபெறும். அதற்கு முன்பாக செயற்கை மலர் கண்காட்சி விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதுமட்டுமின்றி மாடி தோட்டம், வீட்டு தோட்டத்தை ஊக்கப்படுத்துவதற்கு தோட்ட திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

பின்னர் கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை பார்வையிட்டார். அங்கிருந்த பாம்பு மற்றும் மயில் உள்ளிட்ட பறவைகளை கையில் எடுத்து பார்த்தார்.

ஒரு பறவையை கையில் பிடித்துக்கொண்டு ‘நல்லா இருக்கீங்களா?’ என கேட்டார். இதனை அங்கிருந்த அதிகாரிகள் பார்த்து வியப்படைந்தனர்.

ஆய்வின்போது துணை வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி மற்றும் வன அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News