உள்ளூர் செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் பயன்படுத்த தடை- ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் மருத்துமனை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காலை, மாலை என இரு வேளையிலும் 140-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணிகளில் இருக்கும் தொழிலாளர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். மேலும் வேலை நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறிஉள்ளனர்.
இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களிடம் திடீரென்று செல்போன் உள்ளதா? என்பதனை சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் செல்போன் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சில நபரிடம் இருந்து அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்தனர்.
அதிர்ச்சியடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது அங்கிருந்து அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் மருத்துமனை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இனி வருங்காலங்களில் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
அப்போது ஒப்பந்த தொழிலாளர்கள் அதிகாரிகள் கூறியதை ஏற்றுக்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.