சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி சிறுவன் பலி- உறவினர்கள் மறியல்
ஸ்ரீபெரும்புதூர்:
செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய். இவர் தனது அக்கா மகன் புகழ் அரசுடன் (வயது12) காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். சுங்குவார்சத்திரம் அருகே, குன்னம் பகுதியில் வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அஜய், மற்றும் சிறுவன் புகழ் அரசு ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் புகழ் அரசு பரிதாபமாக இறந்தான். அஜய் படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையே வளைவான சாலையில் வேகத் தடை இல்லாததால் அசுர வேகத்தில் இயக்கப்படும் கல்குவாரி லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டி சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சுமார் 100கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.