உள்ளூர் செய்திகள்
வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் மருங்குளத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சம்பந்தமாக விதை தளைகள் உற்பத்தி, மண்புழு உரம் தயார் செய்யப்பட்டு பாக்கெட் போடும் பணிகள் மற்றும் பழ மரக்கன்றுகள் உற்பத்தி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை இந்த திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பாளரும் குடுமியான்மலை தோட்டக்கலை பயிற்சி நிலைய துணை இயக்குனருமான அன்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறும்போது:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 23-ந் தேதி (திங்கள் கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றார்.
இந்த ஆய்வின் போது தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.