உள்ளூர் செய்திகள்
ராஜீவ்காந்தி கொலையாளிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது- மாநில தலைவர் சுப்பிரமணியன் கருத்து
ராஜீவ்காந்தி கொலையாளிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது என்று மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் இருந்து பிரித்து, தமிழ் ஈழத்தை தனிநாடாக ஆக்க முடியாத சூழ்நிலை அப்போது நிலவியதால், இலங்கை நாட்டிலேயே, தமிழ் ஈழம் ஒரு மாநிலமாக உருவாக்கி தருகிறேன்.
இதனால் தமிழர்கள், தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தோடு தனித்தன்மையுடன், (தமிழ்நாடு போல) தலை நிமிர்ந்து சகல உரிமைகளுடன் வாழலாம் என ராஜீவ் காந்தி கூறினார். தமிழினத்துக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு ராஜீவ்காந்தி கூறிய ஆலோசனையை அன்றைய தமிழீழ போராளிகள் நிராகரித்தனர்.
தன்னிகரற்ற, உலகம் போற்றிய நமது இளம் பாரத பிரதமரை மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தனர். இதனால் இந்திய தேசமே தனது ஒரு மாபெரும் தலைவரை இழந்தது.
இதனால் இலங்கையில் தமிழ் இனம் தங்களது நிலப்பகுதிகளை இழந்து, உரிமைகளை இழந்து, அடிமைகள் போல் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழ்கின்றனர். இந்த படுகொலைக்கு காரணமான கொலையாளிகளை, இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ராஜீவ்காந்தியின் மனைவி, மகன் மற்றும் மகள் மன்னித்தாலும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியும் மன்னிக்காது. ராஜீவ் காந்தியோடு இந்த மனித வெடிகுண்டு தாக்குதலால் உயிரிழந்த 16 இந்திய தமிழர்களை பற்றியும் இந்த விடுதலையை போற்றி மகிழ்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.