உள்ளூர் செய்திகள்
சாலை - தெரு விளக்கு வசதி- சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
அரும்பார்த்தபுரம் எழில் நகரில் சாலை - தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரி அதிகாரிகளிடம் எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி அரும்பார்த்தபுரம் எழில் நகரில் சுமார் 150 குடும்பங்கள் 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த பகுதியில் போக்குவரத்து வசதிக்காக சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சாதாரண நாட்களில் கூட சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. அதுவே மழைக்காலமாக இருந்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவாவிடம் முறையிட்டனர்.
அப்போது நீண்ட காலமாக சாலை வசதியில்லாத எங்கள் நகருக்கு சாலை வசதிகளையும், தெரு விளக்குடன் மின் கம்பம் வசதியும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அரும்பார்த்தபுரம் எழில் நகரில் ஆய்வு மேற்கொண்டு சாலை மற்றும் மின்கம்ப வசதிகளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.