உள்ளூர் செய்திகள்
கைதிகளை விடுவிக்க வேண்டும்- அ.தி.மு.க. கோரிக்கை
கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ் கொலை குற்றவாளிகளை மாநில அரசு விடுதலை செய்யும் என 19.02.2014-ல் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
அவரை தொடர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என 9.9.2018-ல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு ஜெயலலிதா வுக்கும் அவரைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசின் தொடர் சட்டரீதியான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் இயக்கம் அ.தி.மு.க. தனது விடுதலைக்காக துணைநின்ற அ.தி.மு.க. முன்னாள் முதல் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை பேரறிவாளன் சந்தித்து நன்றியை தெரிவித்ததே அவரின் விடுதலைக்கு அ.தி.மு.க.தான் காரணம் என்பதை தி.மு.க.வினர் உணர வேண்டும்.
இத்தீர்ப்பை புதுவை அரசு முன்னுதாரணமாக எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஆயுள் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க அரசும், முதல்- அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.