உள்ளூர் செய்திகள்
பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கொரசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன் (எ) வேல்ராஜ் (வயது 50). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. மார்ச் 18ம் தேதி இவரது வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளை போனது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகப்பட்டினம் செக்கடி தெருவைச் சேர்ந்த சேகர் என்கிற கொரசேகர் (வயது 50) கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் இருந்து வந்தார். கொரசேகர் மீது நாகை, வெளிப்பாளையம், நாகூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கொரசேகர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து கொர சேகரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கீழ்வேளூர் போலீசார் நாகை மாவட்ட சிறையில் இருந்த கொரசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.