உள்ளூர் செய்திகள்
வில்லியனூர் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே முத்துபிள்ளைப்பாளையம் அய்யனார் கோவில் அருகே பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு நின்றுக்கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
அவர்களது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 80 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் வில்லியனூர் பாண்டியன் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (21) மற்றும் வில்லியனூர் கோட்டைமேடு நடுத்தெருவை சேர்ந்த முகிலன்(22) என்பதும், இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.