உள்ளூர் செய்திகள்
தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை கோவிந்தசாலை ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது39). இவர் காலாப்பட்டில் உள்ள ஒரு மதுக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.
இரவு 11 மணியளவில் வேலை முடிந்து ரவிச்சந்திரன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். புதுவை அண்ணாசாலை-ராஜா தியேட்டர் அருகே வந்த போது கோவிந்தசாலையை சேர்ந்த ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு காபி கடையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் மணிவண்ணன் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிக்கொண்டிருந்தது.
இதனை ரவிச்சந்திரன் தட்டிக்கேட்டார். அப்போது அந்த கும்பல் ரவிச்சந்தினையும் அந்த கும்பல் கல்லால் சரமாரியாக தாக்கியது.
இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோரை அந்த வழியாக வந்த மணிகண்டன் என்பவர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரவிச்சந்திரனையும், மணிவண்ணையும் தாக்கியவர்கள் முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த பிரவீன்(வயது23), சந்தோஷ்(21) மற்றும் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த கிரி(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(57). இவர் கடந்த 17 ஆண்டுகளாக பூமியான்பேட்டை ஜவகர்நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் திருவாண்டார் கோவிலில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும் தொண்டமாநத்தத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு தமிழரசன் தொண்டமாநத்தத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றார். அங்கு மண்டப மேடையில் மொய்பணம் கொடுத்து விட்டு கீழே இறங்க முயன்றார். அப்போது அங்கு வந்த ஜெயமூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி தமிழரசனை தாக்கினார். இதனை அங்கிருந்த 3 பேர் தட்டிக்கேட்ட போது அவர்களையும் ஜெயமூர்த்தி தாக்க முயன்றார்.
மேலும் தமிழரசனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு ஜெயமூர்த்தி சென்றார்.
இதுகுறித்து தமிழரசன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.