உள்ளூர் செய்திகள்
சலுகை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு- முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா குற்றச்சாட்டு
அடையாள அட்டை வழங்காததால் மானியம், சலுகை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்று முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு விவசாய பண்ணையில் உழவர் உதவியகம் மூலம் திருபுவனை, கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார் பாளையம், குச்சிப்பாளையம், சிலுக்காரிபாளையம், பி.எஸ்.பாளையம், நல்லூர், திருவண்டார்கோவில், சன்னியாசிகுப்பம், கொத்தபுரிநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் விவசாய விளை பொருட்களுக்கான மானியம் மற்றும் விதைகள் மற்றும் இடுபொருள்கள் பெற்று வருகின்றனர்.
சிறு விவசாயிகள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி இந்த உதவிகளை பெற்று வருகின்றனர்.
தற்போது விவசாயிகள் புதிய சிறு விவசாய அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்து அது அதிகாரிகளால் ஆய்வு செய்து தயார் செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள் உழவர் உதவியகம் மூலம் மானியம், சலுகைகளை பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதில் முதல்- அமைச்சர்மற்றும் வேளாண் அமைச்சர் தலையிட்டு துறையின் இயக்குனரிடம் அறிவுறுத்தி உடனடியாக விவசாயிகளுக்கு சிறுவிவசாயி அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கோபிகா அறிக்கையில் கூறியுள்ளார்.