உள்ளூர் செய்திகள்
மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் பிரசிபெற்ற கூத்தாண்டவர் கோவில்களில் பிள்ளையார்குப்பத்திகு இணையாக வெகுவிமர்ச்சியாக கொண்டாடப்படுவது மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம். கூத்தாண்டவர் கோவில் மற்றும் திரவுபதியம்மன் கோவில் என இரண்டும் ஒரே ஆலயத்தின் கீழ் அமையப்பெற்று ஒருவாரம் முழுவதும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் கூத்தாண்டர் மற்றும் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. முன்னதாக பிடாரியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் பகவான் கிருஷ்ணர் முன்னிலையில் அர்ச்சுணன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மனிதன் மார்பு மீது மஞ்சள்தூள் இடித்தல், கூத்தாண்டவர் திருக்கல்யாணம், இரவு தாலிகட்டுதல் என முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புதுவை மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டனர்.
இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், கிருஷ்ணர், மாரியம்மன், திரவுபதியம்மன், அர்ச்சுணன், அரவான் வீதியுலா வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்றுகாலை 7மணிக்கு அரவாண் சிரசு பொருத்தப்பட்டு கூத்தாண்டவர் தேர்புறப்பாடு நடைபெற்றது.
திரளாக கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். வைத்திலிங்கம் எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது முக்கிய மாடவீதிகள் வழியாக சென்றது. அப்போது பக்தர்கள் நிலத்தில் விளைந்த பொருட்கள், சில்லரை காசுகள் ஆகியவற்றை சாமிமீது வீசி நேர்த்திகடனை செலுத்தினர்.
மாலையில் கூத்தாண்டவர் அழுகளம் கொண்டு செல்லப்பட்டு, திருநங்கைள் ஒப்பாரி வைத்து தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது, வருகிற வெள்ளிக்கிழமை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெறும். திருவிழா நடைபெறும் ஒருவாரம் முழுவதும் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், கரகாட்டம், தெருகூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாகுழுவினர் செய்து இருந்தனர்.