உள்ளூர் செய்திகள்
அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தி.மு.க சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க ஆட்சி அமைந்ததும் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்து போட்டு கொரோனா நிதி வழங்கினார். இரண்டாவதாக பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம்.
மூன்றாவதாக கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.
சாலைகளில் நடைபெறும் விபத்துக்களை குறைக்கும் வகையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி நம்மைக் காக்கும் 48 மணி நேர திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கடந்த 3 மாதத்தில் ரூ.51 கோடி மதிப்பில் 58 ஆயிரத்து 193 பேர் உயிர்களை முதல்வர் காப்பாற்றியுள்ளார்.
பள்ளிகளில் காலைச்சிற்றுண்டி வழங்கும் அற்புதமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 500 கோவில்களுக்கு ரூ.ஆயிரம் கோடி அரசு செலவில் குடமுழுக்கு நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.2 ஆயிரத்து 566 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கட்சி பேச்சாளர் காரைக்குடி கணேசன் உட்பட பலர் பேசினர்.
முன்னதாக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். முடிவில் கிளை செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார்.