உள்ளூர் செய்திகள்
போலீஸ் ஐ.ஜி.சந்திரனிடம் வையாபுரி மணிகண்டன் மனு
கட்சி மாறியதாக அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று போலீஸ் ஐ.ஜி., சந்திரனிடம் வையாபுரி மணிகண்டன் மனு அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் போலீஸ் ஐ.ஜி சந்திரனை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு, அ.தி.மு.க.வை சீரோடும், சிறப்போடும் வழி நடத்தி வரும் அ.தி.மு.க.வின் இருபெரும் தலைவர்களின் ஆதரவோடும், ஆசியோடும், புதுவை மாநிலத்தில் கட்சி பணியாற்றி வருகிறேன்.
எனது செயல் பாடுகளால் கட்சியின் இருபெரும் தலைவர்களும் புதுவை கிழக்கு மாநில துணை செயலாளர் பதவியை வழங்கியுள்ளனர். இந்த சூழலில் சில விஷமிகள், எனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
நான் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும், மாற்று கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூகவலை தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பும் விஷமிகள், அரசியல் வியாபாரிகளை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.