உள்ளூர் செய்திகள்
மின்வாரியத்துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
திட்டச்சேரியில் உள்ள மின்வாரியத்துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேரூராட்சிக்கு சொந்த மான இடத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் மின்வாரி யத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. திட்டச்சேரியில் வீடுகள், கடைகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருமுனை, மும்முனை மின் இணைப்புகள் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேல் மின் வருவாய் ஈட்டக்கூடிய வருவாய் கிராமமாக திட்டச்சேரி உள்ளது.
இந்த நிலையில் பகல், இரவு என 24 மணி நேரமும் மின் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மின் ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்றதாக அறையாகவும், மின் உபகரணங்களை வைக்கும் அறையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதம் அடைந்து உள்ளது. இந்த சேதம் அடைந்த கட்டிடத்திலேயே தற்போது வரை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து உண்டாக்கும் நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழை நீர் கசிவதால் கணினி மற்றும் உபகரணங்கள் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மின்கட்டணம் செலுத்து வதற்கு தனியார் கணினி மையங்களை நோக்கி செல்வதாகவும் அங்கு ரூ.10 முதல் 50 வரை பில் செலுத்த கமிஷனாக பெறப்படுகிறது எனவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.